'சொல்வன்மை' பற்றிய 'ஒருவிகற்ப நேரிசை வெண்பா'


திருக்குறளை ஈற்றிரண்டு அடிகளாய்ச் சேர்த்து
'சொல்வன்மை' பற்றிய 'ஒருவிகற்ப நேரிசை வெண்பா'
**********
சொல்லும் மனச்சொல் சுடவேண்டா மென்பதனைச்
சொல்லும் வகையாகச்  சொன்னாரே - சொல்போட்டு
சொல்லுக சொல்லில் பயனுடைய, சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
***********

இயற்கை போற்றி : எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் : ( பாட்டியற்றுக 11, பயிற்சியில் நான் எழுதிப் பதிவிட்ட பாடல்) :
நன்றி  : பைந்தமிழ்ச் சோலை (மரபு பூக்கள் மட்டும்)
இயற்கையை அளித்த 'இறையே போற்றி' :
 ****************************
செவ்வியுடைப் புவிதன்னைச் செய்து வைத்தாய்
....செங்கதிரோன் ஒளிகொண்டு நிறைத்து வைத்தாய்
இவ்விரண்டைப் பலபொருளால், இணைத்து வைத்தாய்
.....இவையாவும் ஒருசேர இயங்க வைத்தாய் !
எவ்வுயிர்க்கும் பயனாகும் இவைய னைத்தும்,
...இப்புவியிற் பலகாலம் இருக்கச் செய்தாய் !
இவ்வுலகம் வந்தவர்கள் இயல்பாய் வாழ,
....இயற்கையினை எமக்களித்த இறையே போற்றி !
 ****************************


 கீழ்கண்டவை : முகநூல் பக்கத்திலிருந்து தெரிந்துகொண்டவை, உங்கள் பார்வைக்காக (நன்றி பாவலர் ஐயா, பைந்தமிழ் செம்மல் வள்ளிமுத்து ஐயா )

பொது இலக்கணம்.
*அரையடிக்கு நான்கு சீர்கள் பெற்று, ஓரடிக்கு எட்டுச் சீர்களும் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,(பொழிப்பு மோனை 1'3' சீர்களில் அமைவதும் சிறப்பு. கருத்தின் முதன்மை வேண்டிப் பலரும் பார்ப்பதில்லை.)
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த. நான்கு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று,
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* அரையடிக்கு "காய்,காய்,மா,தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு
முடிவது(ஏகாரம் சிறப்பு.)
தனிப்பாடலாயின்(முத்தகம்) ஏகாரமே சிறப்பு.
தொடர்பாடலாயின்(குளகம்) எப்படியும் முடியலாம். இறுதிப் பாடலின்
இறுதிச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு
"எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.
மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம்.
ஆனால் அரையடியின் ஈற்றுச்சீரான நான்காம் சீரும், எட்டாம் சீரும் "தேமாச் சீராகவே வரல் வேண்டும்."
முதல்சீர் எக்காய்ச்சீரில் தொடங்குகிறதோ அதே காயில் அடுத்த அடியின் முதற்சீரும் தொடங்குதல் நன்று. ஓசை சிறக்கும்.

திருக்கடல்மல்லை, திருச்சிறுபுலியூர்

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா :
தலசயனங் காணத் தடையேது மில்லை,
சலசயனச் சித்துருவம், தன்னுருவில் நீண்டுப்
பலர்க்கு மினிதளிக்கும்; பார்க்கு(ம்) மகற்குச்
சிலநொடிஆ னாலுஞ் சிறப்பு !

# திருக்கடல்மல்லை, திருச்சிறுபுலியூர்

வெண்பா வெண்டளை, குறளடியில்

வெண்பா வெண்டளை, குறளடியில் :
****************
மாமுன் நிரையே வருங்காண், விளத்தொடு
காமுன் வருநேரைக் காண் !
*******
மாமுன் நிரையே வருங்காண், விளத்திற்குங்
காய்முன்னும் நேர்வரக் காண் !
***************
மாமுன் நிரையே வருங்காண், விளத்திற்குங்
காய்முன் வருந்நேரைக் காண் !
# ஆசெதுகை பற்றிச் சொல்லித் தெரிய வைத்த பாவலர் அவர்களுக்கு நன்றி
***********************

ஆசிரிய விருத்தம் (வேறு) 15-11-2017

ஆசிரிய விருத்தம் (வேறு) (  பாட்டியற்றுக_10, 13 நவம்பர் 2017 -  பைந்தமிழ்ச் சோலையில், முகப்புத்தகம்,  பகிர்ந்தது.)

கொடுக்கப்பட்ட பொருள் : 'நிலையாமை'
**********
பாதைகள்ப லகண்டபூமி தனில்நிலையே துமில்லையெனப்
....பலருஞ் சொன்னார்;
சாதனைக ளானாலும் வேதனைக ளானாலுஞ்
....சாயு மோர்நாள் !
மாதவத்தால் வந்தவையும் மறைந்திடுமே, மாற்றியவோர்
.....மதியு முண்டோ ?
காதறுந்த ஊசிகளும், கடைவழிக்கு வந்ததனைக்
.....கண்டா ருண்டோ ?
***********

மேற்கண்ட பாடல் "அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்."
(காய்/காய்/காய்/காய்/மா/தேமா)ஆகும்.
பொது இலக்கணம்:
*********************
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த இரண்டு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும் எழுதலாம்.)
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஓரடிக்கு " காய், காய்,காய்,காய்,மா,தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டும்
முடிவது(ஏகாரம் சிறப்பு)
"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
தனிப்பாடலாயின்(முத்தகம்) ஏகாரமே சிறப்பு.
தொடர்பாடலாயின்(குளகம்) எப்படியும் முடியலாம். இறுதிப் பாடலின்
இறுதிச்சீர் ஏகாரம் பெறல் சிறப்பு.
காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.
மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம்.
ஆனால் ஈற்றுச்சீர் தேமா மட்டுமே வரவேண்டும்.
முதலடியின்முதற்சீர் எந்தக் காய்ச்சீரில் தொடங்குகிறதோ மற்ற மூவடிகளின் முதற்சீரும் அதே காய்ச்சீரில் தொடங்க வேண்டும். சான்று பாடலில் நான்கு முதற்சீர்களும் கூவிளங்காயில் தொடங்கியிருப்பதைக் காண்க. இரண்டு, மூன்று, நான்காம் சீர்களில் எந்தக் காய்ச்சீர்களும் வரலாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 06-11-2017

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் :
பன்னிரு ஆழ்வார்கள் : (விளம், மா, விளம், மா, விளம், காய் )
******************************
சோழசே ரநாட்டொ டுபாண்டிய நாடு,
..தொண்டையில் கண்டதனை ;
ஆழ்கட லமுதை; நடுவட தேச
...மடைந்துதாங் கண்டதனை;
வாழவைக் குந்தெய் வந்தனை, விண்ணில்
...வைத்துவாழ்த் துப்பாடி;
ஆழமா யாழ்ந்த ஆறிரு ஆழ்வா
...ரவர்புகழ் போற்றுதுமே !

 
 *****************
 நன்றி : பைந்தமிழ்ச் சோலை, முகப்புத்தகம்:
"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்."
(விளம்,மா,விளம்,மா,விளம்,காய்)
பொது இலக்கணம்:
*********************
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த இரண்டு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும் எழுதலாம்.)
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஓரடிக்கு " விளம், மா, விளம்,மா,விளம்,காய்." என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏகாரத்திலோ அல்லது எப்படியும் முடியலாம்.
தனிப்பாடலாயின் (முத்தகம்) ஏகாரமே சிறப்பு.
தொடர்பாடலாயின்(குளகம்) இறுதிப் பாடலின் இறுதிச்சீர் ஏகாரம் பெறல் சிறப்பு.
விளச்சீரெனில் (முதல்சீர்.)கூவிளம், கருவிளம் இரண்டில் எதுவும் வரலாம்
மாச்சீர் எனில்தேமா, புளிமா எதுவும் வரலாம். காய்ச்சீர் எனில் எந்தக் காயும் வரலாம்.
***************************************

ஏதேனும் புரிகிறதா ? 05-10-2017

பல விகற்ப இன்னிசை வெண்பா :
அயராமற் சாய்ந்த அளவுதரு(ம்) வர்க்கம்,
உயரமாய் நின்றும் உறங்கு மளவுகள்
தத்தம் மடங்கொடு தாம்சேர. வொன்றானால்,
சுத்தசெங் கோணமே, சுட்டு !

வெள்ளொத்தாழிசை - 03-10-2017

வெள்ளொத்தாழிசை :
 <a href="https://facebook.com/groups/914195052001517?view=permalinkid=1534070003347349&_rdr">நன்றி/மூலம் முகநூல்</a> 

இஃது வெண்பாவின் இனமாகிய "வெள்ளொத்தாழிசை." வகையாகும். (வெண்பாவின் தாழிசை இனமாகும்.)
இது மூன்று பாடல்கள் பொருளில் ஒத்து வருவதால் "வெள்ளொத்தாழிசை" எனப்படும்.
பொது இலக்கணம் :
* வெண்டளையைப் பெற்றுவரும்.
* மூன்றடிகளால் வரும்.
* மூன்றடிகளும் ஓரெதுகையைப் பெற்று
* அடிதோறும் பொழிப்பு மோனை (1,3 ஆம் சீர்களில்) பெற்று
* ஈற்றடி முச்சீராய், முன்னிரண்டு அடிகள் நாற்சீராய்,
* ஈற்றுச்சீர் நாள்,மலர், காசு,பிறப்பு ஆகியவற்றுள் ஒன்றனைக் கொண்டு முடியும்.
* ஒரு பொருள்மேல் மூன்று பாடல்கள் வரவேண்டும்.
* மூன்று பாடல்களுக்கும் ஒரே எதுகை வேண்டுமென்பதில்லை.

இறைவனின் பண்பிணை 'வெள்ளொத்தாழிசையாக' இதோ ஒரு பாடல் : 
**********************************
வான்வெளியும் மண்ணும் வளியுஞ் சுடுதீயும்
ஊன்பருகு நீரும் உணவுமளிக் குந்தெய்வந்
தான்காத்துச் செய்யுந் தலை  !  (1)
------------
ஊராருள் தன்னை யுணர்ந்தார்க்குக் கேடென்றும்
வாராமற் தான்காத்து வாழ்விக்க, வோர்பக்கஞ் 
சாராமற் செய்யுந் தலை !   (2)
------------
மரிக்கும் உடலல்ல, மண்வந்த மைந்தர்
தரித்திடும் வேடத்தின் சாரமுங் காட்டிச்
சரியாகச் செய்யுந் தலை ! (3)
*********************************

படங்கண்டு வந்த பாடல் - 04-09-2017

அறுசீர்க்கெழிநெடிலடி ஆசிரியவிருத்தம்  -- விளம் மா தேமா

உள்ளிரு காற்று ஊதி
....ஓரிசை வெளியே தள்ளிக்
கள்ளனாய்ப் பார்வை தந்தக்
...காதலன், கண்ணன் கொண்ட
வெள்ளையுள் ளத்தைக் கண்டு
....வேண்டிய இளம்பெண், தானும்,
உள்ளதை உணர்ந்து பேசி
.....ஊறுகள் நீங்கக் கண்டாள் !

# உள்ளமொழி == உள்ளத்தில் இருக்கும் / வெளிப்படும் மொழி.
# ஊறுகள் = துன்பங்கள்

படத்திற்கொரு பாட்டு... :: 22-08-2017




நேரிசை வெண்பா :
குழலூதும் கண்ணன், குழல்தந்து சாய்ந்து
குழல்மங்கை யோடு குழைவான் - நிழலாய்;
இதனைக் கவியாய் இனிதாய்ப் படிக்க
இதமாய் இருந்ததே இன்று


Photo Courtesy : Karthik Lakshmi Narasimman  @ FB

வஞ்சப்புகழ்ச்சி அணி - 1 (12-08-2017)

வஞ்சப்புகழ்ச்சி அணி  :
  வஞ்சம் + புகழ்ச்சி = வஞ்சப்புகழ்ச்சி;
  தமிழின் அணி வகைகளுள் ஒன்று வஞ்சப்புகழ்ச்சி அணி.    
  ஒருவரை புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்.

(மா விளம் தேமா --- அறுசீர் கலிவிருத்தம் )

அறிவி லாதவன் நீரே
...அன்பி லாதவன் நீரே
குறிப்பி லாதவன் நீரே
....கூர்மை யிலாதவன் நீரே
மதியி லாதவன் நீரே
...வலிமை யிலாதவன்  நீரே
சதியில் எழுந்தவிப் பாடல்
...சரிந்து மாறிய தேகாண் !

# சதியில் - விரைவில் , சீக்கிரத்தில்
# சரிந்து மாறிய தேகாண் -- சொல்லிய பொருள் 'சரிந்து' வேறு பொருள் தருமாறு மாறியதை காண்பாயோ !

அறிவில்லாதவன் = அறிவில் + ஆதவன் ( சூரியன் ) போன்று பிரகாசிப்பவன் 

மடக்கணி - 1 (10-08-2017)

 நேரிசை வெண்பா : மடக்கணியாக 
மாலை மலர்ந்திட வாடும் மனத்தினுள்;
மாலை மலர்ந்திட வாடும்பூ - சோலைப்பூ
மாலையில் சேர்ந்த மணத்தால் பெருமின்பம்
மாலையில் சேர்ந்த மணம் !

(1) மாலை வேளை வந்துவிட்டால், தலைவனின் வரவிற்காக வாடும், தலைவியின் மனம்.
(2) (பூ)மாலை நேரக்கணக்கில் மலர்ந்து வாடிவிடும் சோலையில் பூக்கும் பூ. (1க்கு இது உவமை)
(3) மாலை சூடி (திரு)மணத்தால் சேர (மனமும்) இன்பமடையும்,.
(4) மாலையாக கோர்த்த நிலையில் 'பூக்கள்' தரும் இன்பம் போல (மணம்போல)..
# இது மடக்கணியாகுமா ?

சொல் பின்வரு நிலையணி : 09-08-2017


*******************************
படிக்கும் படிப்பைப் பயனாய்ப் படிக்கப்,
படித்தார் படியே படிப்பாய் ; - படிப்பால்
படியி லுயர்துப் படித்தநல் லோர்கீழ்ப்
படிந்தாற் பலனே, படி
*******************************

சிலேடை - பூமியும் தேரும் -- (#மாதவன்_சிலேடை 4)

நேரிசை வெண்பா : (28-07-2017) சென்ற வார, ஆடிப்பூர தேர்த்திருவிழா கண்டதன் விளைவு இப்பாடல்.
சிலேடை - பூமியும் தேரும்  -- (#மாதவன்_சிலேடை 4)
******************************

பைய நகர்ந்து, பருவமோர் வட்டமிட்டு,
மெய்யிலே மேடுகாட்டி, வெம்மையுடை - ஐயனை
மையமாக்கி, யென்றும் மறுபாதை செல்லாத,
வையம், வடத்தேராய் வந்து
******************************

* பருவம் -- தொடர்ந்து சுழற்சியாக நடக்கும் செயல் -- இவ்விடத்தில் ஆண்டு/வருடம்.
* "மேடு" ==  பூமியுள்ள மலை, தேரின் உடற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளச் சிலை (பொம்மை)
* "வெம்மையுடை(ய) ஐயன்" -- வெப்பம் பொருந்திய சூரியன், பராக்கிரமம்(வெம்மை) பொருந்திய தெய்வம்

ஆடிப்பூர தேர்த்திருவிழா - அந்தாதி 29-07-2017


இராஜமன்னார்குடி ஆடிப்பூர தேர்த்திருவிழா கண்டருளும் வேளையில் , ஸ்ரீ. செங்கமலத்தார் சமேத ஸ்ரீவித்யா இராஜகோபாலன் திவ்ய தம்பதிகளுக்கு இப்'பா'மாலை சமர்ப்பணம் : (2017)
**********************
காப்புச் செய்யுள் :

சங்கொடு சக்கரத் தண்ட முடைவாளுந்
தங்கையில் வில்லும் தரித்துத்தன் - மங்கையாம்
செங்கமலத் தோடுச் சிறப்பாய்க் குடிகொண்ட
புங்கைமர நந்தனைப் போற்று !              (லாபம்)
****************************

ஆடியிலெம் மன்னையில் ஐயிரண்டு நாட்களிலும்
ஓடிவந்து காண்போமே ஓரன்னை - பாடியாடித்
தேடிவரு வோர்காணுஞ் செங்கமலத் தாயவளை
நாடிவர, நல்குவாள் நன்று.  (1அ )

நன்றான வேளையில் நாம்வணங்க ஏதுவாய்
இன்றும், அரிமா வெழுகொடி சென்றுவந்து
ஓங்கிய கம்பி லுயரவே மன்னையன்னை
பாங்கொடு செல்வதைப் பார். (1ஆ)
****************************
செல்வதைப் பார்த்திடச் சேர்ந்திடுமே உள்ளபயன்;
சொல்லால் துதித்திடத் தோன்றிடுமே - நல்லபயன்;
அல்லவை நீக்கிடவே அன்னத்தில் அன்னைவர       ^
இல்லையொரு துன்பமு(ம்) இங்கு !  (2)
****************************
துன்பமிங் கில்லை, துயரமும் இங்கில்லை;
இன்பங் கிடைக்குமே இவ்வெழில் - மன்னையில் ;
நன்னெறியால் நம்மவளை நாகத்திலே நாம்காண,
நன்மை நடக்கும் நமக்கு !   (3)
****************************
நடக்கும் நமக்கு நலமாய் எதுவும்;
தடங்கல் அகன்று தழைக்கும் - இடமாம்;
பதமாய்ப் பலரும் பணியும் பணிவால்  
இதமாய் வருவாள் இணைந்து   (4அ )

வருவாள் இணைந்து வனவேந்தன் ஏந்த,
பெருமாள் உடன்சேர் பெரிதாய்க் கருடன்
சரியாய்ப் பொருந்தும் சமயம் அமையப்
பிரியமாய் கண்டேன் பிறந்து !  (4 ஆ)
****************************
கண்டேன் பிறந்து, கமலமலர் மேலொரு,
பெண்குலம் போற்றும் பெரியவளை - மண்ணிலோர்
வண்ணமாய், வானுயர் மன்னையில், மன்னவன்
கண்ணன் துணையினைக் காண் ! (5)
****************************
துணையினைக் கண்டால் துயரம் விலகும்,
இணைக்கும் அருளால், இறுக்கும் - அணைப்பால்:
இணையிலாச் சேவகன் இலங்கையிற் கண்ட
கணையாழித் திருமகளைக் காண் !  (6அ)

திருமகளைக் காணலாம், தேர்ந்த பெரியோர்
ஒருங்கே மறைநான்கும் ஓதுந் -  தெருவினில்
ஆர்வமாய் வெண்ணிற ஐராவ தந்தாங்க
ஊர்வலம் செல்வாளே ஊர்ந்து   (6ஆ)
****************************
செல்வாளே ஊர்ந்து, செழுமைசேர் மன்னையில்,
நெல்லின் மணிகள் நிலைத்திட - எல்லிபோகு
மாலைவெயில் வீச, மரக்கால் அளக்கும் 
வேலையை நாடிநீ வேண்டு     (7)

# எல்லி-போகு  = கதிரவன்+போகும் (மறையும் வேளை)
**********************************
நாடிநாம் வேண்டலாம்; நற்கதி தேடலாம்;
தேடினால் வந்திடும்; சேர்ந்துநாம் - ஆடியில்    
கூடினால், ஓடுங் குதிரையில் காணலாம்
ஓடிவா, சேவையிங் குண்டு !  (8)  
******************************
சேவையிங் குண்டு, தினமது கண்டுயாம்,
பாவையைப் போற்றிப் பணிந்துருகிக் - கோதையாய்
வந்திருக்குங் கோமகளை வண்ணமயத் தேரிலே
இந்நாளில் கண்டோம் இனிது   (9)
*******************************
கண்டோம் இனிது; கலந்தோம் ஒன்றென
உண்டோ இதுபோல், உலகிலே? - மண்ணிலே
மாமணம் வீசும், மலர்சூழ்ந்த பல்லக்கில்
மாமகளைக் கண்டு மயங்கு !   (10 அ)

கண்டு மயங்கிக் கவிதை படித்தேனே !
வண்டு வராவதி மன்னையிற் - உண்டு
உறங்கிப் பணிந்தேனே! உன்னை உணரப்
பிறந்தேனே, ஆடியில் யான் !  (10 ஆ)
******************************


^ அல்லலின்றி அன்னத்தில் அன்னை அமர்ந்திட -- என்றும் வரலாம்.

ஸ்ரீ செண்டும்  கையும் ஸ்ரீ செங்கமலாத் தாயார் துணை :

ஆடித்திருவிழா 10ம் திருநாள் : சப்தாவர்ணம் 28-07-2017

ஆடிப்பூர,  உத்சவம் :
நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

**********************
கண்டோம் இனிதாய்க் கலந்தோம் ஒன்றென,
உண்டோ இதுபோல், உலகிலே? - மண்ணிலே
மாமணம் வீசும், மலர்சூழ்ந்த பல்லக்கில்
மாமகளைக் கண்டு மயங்கு !   (10 அ)

கண்டு மயங்கிக் கவிதை படித்தேனே !
வண்டு வராவதி மன்னையிற் - உண்டு
உறங்கிப் பணிந்தேனே! உன்னை உணரப்
பிறந்தேனே, ஆடியில் யான் !  (10 ஆ)
************************** 

தாயார் புஷ்பப்பல்லக்கு மன்னார்குடி

புகைப்பட உதவி ஸ்ரீ. ஹரிசரண் நாராயணன்

ஆடித்திருவிழா 9ம் திருநாள் : திருத்தேர் -- 27-07-2017

ஆடிப்பூர, திருத்தேர் உத்சவம் :: ஆடித்திருவிழா 9ம்
நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
*********************
சேவையிங் குண்டு, தினமது கண்டுயாம்,
பாவையைப் போற்றிப் பணிந்துருகிக் - கோதையாய்
வந்திருக்குங் கோமகளை, வண்ணமயத் தேரிலே
இந்நாளில் கண்டோம் இனிது   (9)
*********************
புகைப்பட உதவி : விஜய் ராம் (முகப்புத்தகம்)

ஆடித்திருவிழா 8ம் திருநாள் - 26-07-2017 (posted on 27-07-2017)


நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
குதிரை வாகனத்தில், ஸ்ரீ. செங்கமலத் தாயார் சேவை :
**********************
நாடிநாம் வேண்டலாம்; நற்கதி தேடலாம்;
தேடினால் வந்திடும்; சேர்ந்துநாம் - ஆடியில்    
கூடினால், ஓடுங் குதிரையில் காணலாம்
ஓடிவா, சேவையிங் குண்டு !  (8)
**********************


ஆடித்திருவிழா ஏழாம் திருநாள் - 25-07-2017

நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

*7ம் திருநாள், நெல் அளத்தல்*  :
**************************************
செல்வாளே ஊர்ந்து, செழுமைசேர் மன்னையில்,
நெல்லின் மணிகள் நிலைத்திட - எல்லிபோகு
மாலைவெயில் வீச, மரக்கால் அளக்கும் 
வேலையை நாடிநீ வேண்டு     (7)
**************************************

#கோவிலில் நெல்அளத்தல் சிறப்பு, இன்று.
# எல்லி-போகு  = கதிரவன்+போகும் (மறையும் வேளை)

புகைப்பட உதவி : ரங்கராஜன் ராஜகோபாலன்



ஆடித்திருவிழா ஆறாம் நாள் - 24-07-2017

நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

*யானை வாகனம்*  :
*********************************************

துணையினைக் கண்டால் துயரம் விலகும்,
இணைக்கும் அருளால், இறுக்கும் - அணைப்பால்:
இணையிலாச் சேவகன் இலங்கையிற் கண்ட
கணையாழித் திருமகளைக் காண் !  (6அ)

திருமகளைக் காணலாம், தேர்ந்த பெரியோர்
ஒருங்கே மறைநான்கும் ஓதுந் -  தெருவினில்
ஆர்வமாய் வெண்ணிற ஐராவ தந்தாங்க
ஊர்வலம் செல்வாளே ஊர்ந்து   (6ஆ)


பட உதவி : @விக்கிவிக்கி முகப்புத்தகம்
********************************************

ஆடித்திருவிழா ஐந்தாம் நாள் - 23-07-2017

நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..

கண்டேன் பிறந்து, கமலமலர் மேலொரு,
பெண்குலம் போற்றும் பெரியவளை - மண்ணிலோர்
வண்ணமாய், வானுயர் மன்னையில், மன்னவன்
கண்ணன் துணையினைக் காண் ! (5)




ஆடித்திருவிழா நான்காம் நாள் - 22-07-2017

 நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
*********************
நடக்கும் நமக்கு நலமாய் எதுவும்;
தடங்கல் அகன்று தழைக்கும் - இடமாம்;
பதமாய்ப் பலரும் பணியும் பணிவால்    
இதமாய் வருவாள் இணைந்து   (4அ )




                                           
வருவாள் இணைந்து வனவேந்தன் ஏந்த,
பெருமாள் உடன்சேர் பெரிதாய்க் கருடன்
சரியாய்ப் பொருந்தும் சமயம் அமையப்
பிரியமாய் கண்டேன் பிறந்து !  (4 ஆ)

(பிரியமாய் கண்டேன் பிறந்து ! இதுபோன்ற ஒரு நன்னாளில், பிறந்தேன்...  பிறந்து இறைவனின் அன்பினை(பிரியத்தை) கண்டேன். )
*******************************






ஆடித்திருவிழா மூன்றாம் நாள் - 21-07-2017

ஐந்துதலை நாகத்தில் அமர்ந்து வருதல் : 21-07-2017 (இராஜமன்னார்குடி)




நேரிசை வெண்பா (நேற்றைய பாடலோடு, அந்தாதியாய்த் தொடர்கிறது)

துன்பமிங் கில்லை, துயரமும் இங்கில்லை;
இன்பங் கிடைக்குமே இவ்வெழில் - மன்னையில் ;
நன்னெறியால் நம்மவளை நாகத்திலே நாம்காண,
நன்மை நடக்கும் நமக்கு !   (3)
 

ஆடித்திருவிழா இரண்டாம் நாள் - 20-07-2017

ஆடிப்பெருவிழா, மன்னார்குடி ஸ்ரீ. செங்கமலாத் தாயார்
ஹெவிளம்பி ளு, ; ஆங்கில மாதம் ஜூலை 2017.
 
2ம் நாள் :  20-07-2017
அன்னப் பறவை மீது அமர்ந்து வீதியுலா : நேரிசை வெண்பா.
(நேற்றைய பாடலோடு இது அந்தாதியாய்ச் சேரும்)

செல்வதைப் பார்த்திடச் சேர்ந்திடுமே உள்ளபயன்;
சொல்லால் துதித்திடத் தோன்றிடுமே - நல்லபயன்;
அல்லலின்றி அன்னத்தில் அன்னை அமர்ந்திட, 
இல்லையொரு துன்பமு(ம்) இங்கு !



# மூன்றாமடி 'அல்லவை நீக்கிடவே அன்னத்தில் அன்னைவர' எனவும் இருக்கலாம்.

ஆடிப்பெருவிழா 2017 - முதல் நாள், 19-07-2017

ஆடிப்பெருவிழா, மன்னார்குடி ஸ்ரீ. செங்கமலாத் தாயார் உத்சவம்
ஹெவிளம்பி ளு, ; ஆங்கில மாதம் ஜூலை 2017.
முதல் நாள் -- அந்தாதி வெண்பா
(காலை, மாலை)
ஆடியிலெம் மன்னையில் ஐயிரண்டு நாட்களிலும்
ஓடிவந்து காண்போமே ஓரன்னை - பாடியாடித்
தேடிவரு வோர்காணுஞ் செங்கமலத் தாயவளை
நாடிவர, நல்குவாள் நன்று.


நன்றான வேளையில் நாம்வணங்க ஏதுவாய்
இன்றும், அரிமா வெழுகொடி சென்றுவந்து
ஓங்கிய கம்பி லுயரவே மன்னையன்னை
பாங்கொடு செல்வதைப் பார்.
புகைப்பட உதவி : Vicky Vicky, Facebook.

சிலேடைக் குறள் வெண்பா


குறள்  வெண்பாவின் இலக்கணப்படி அமைந்தது..
ஈரடியாய், அடிக்கோர் பொழிப்பு மோனையமைந்தும், நாற்சீர், முச்சீராய் அமைந்தது.





********
உண்ணுமுண வாய்த்துள்ளி, ஊன்தாங்கு புள்ளிகளால்
கண்ணுவமை மீன்மானே, காண்

(1) உண்ணுமுன வாய் -- பிற உயிர்களுக்கு உணவாதலால்
(2) துள்ளி  --  துள்ளி குதித்து அங்குமிங்கு ஓடுவதால்
(3) ஊன்தாங்கு புள்ளிகளால் -- உடல் மீதமைத்த புள்ளிகளால்..
(4) கண்ணுவமை ::  அழகிய கண்ணிற்கு உவமையாகச் சொல்வதானால்...
'மீன்', 'மான்' போன்று இருப்பதை காண்பாயோ !
********

வலைத்தளம்-வான்புறா (சிலேடை)

சிலேடை : புறாவும், வலைத்தளமும் (நேரிசை வெண்பா)

விண்ணில் பறக்கும்; விடுசொல் தொலைசேர்க்கும்
மண்ணில் மனிதருக்கு மாமகிழ்ச்சி யூட்டும்;
விலைகொடுத்துச் செய்த வேலைகளு முண்டாம் ;
வலைதளம் வான்புறாவாய் வந்து !


(1) விடுசொல் தொலைசேர்க்கும்  : நாம் விடுக்கும் சொல்லை தொலைவான இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும்.
(2) விலைகொடுத்துச் செய்த வேலைகளு முண்டாம் :
        (a) வலைத்தளம் : கட்டுமானப் பணிகளால் ஆனது.
        (b) புறா  : தனது உழைப்பை விலையாகக் கொடுத்து வேலை செய்து கூடு கட்டும். 

நிலவும் செருப்பும் :நேரிசை வெண்பா (சிலேடை )


உடன்சேர்ந்து வந்திடுமே, உள்ளங்கால் தொட்டும்;
நடவாசல் சேர்ந்திடினும், நாடா - விடங்காண் ;
உயர்வாய் மழலைகா ணோவியமுங் கொண்டச்
செயலில் நிலவாஞ் செருப்பு !

செருப்பு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : அணிந்து செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : உள்ளங்கால் கீழ், தொடுமாரு அணியப்படும்.
(3) நடவாசல் சேர்த்திடினும், நாடா - விடங்காண் ; நடக்கும் வாசற்படி வரை வந்தாலும்... வீட்டினுள் / கோவிலினுள் செல்லாது... கண்டாயோ !
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட : உயர்வான / போற்றக்கூடிய ஓவியம் தன மீது வரையப்பட்டிருக்கும்.(குழந்தைகள் செருப்பு)

நிலவு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : நடந்து / ஒடி / வாகனத்த்தில் செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : கால் நிலவு (பிறை நிலவு) வருமாயின் அது கண்டு உள்ளம் பாய்ந்து பறித்திடத் தொடும்படி ஆசையூட்டும்.
(3) நடவாசல் சேர்த்திடினும், நாடா - விடங்காண் ; நிலவு(ஒளி) நடக்கும் வாசற்படி வரை வந்தாலும்... வீட்டினுள் / கோவிலினுள் செல்லாது... கண்டாயோ !
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட: உயர்வான / போற்றக்கூடிய ஓவியம் தன மீது வரையப்பட்டதுபோல இருக்கும். (பாட்டி வடை சுடுவது கேட்ட குழந்தைக்கு.)

செயலில் நிலவாஞ் செருப்பு : இவ்வாறான செய்கையினால் / ஒத்த பண்பினால் நிலவுபோல் ஆகுமே செருப்பு.